Tuesday, March 22, 2011

மனைவியைக் கொல் (பதில்கள்)

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 423 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். \'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?\' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். (\"அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்\" என்று நபி(ஸல்) கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே லிஆன் செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். \
இது எனக்கு சரியாகப்படவில்லை. ஏன் இப்படியுள்ளது என்பதை விளக்குங்கள்.
Name: abdul azeez
email: azeez1729@...
Location: abudhabi
Subject: kelvi

இறைவன் அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளனாக இருக்கிறான். அவன் வகுத்த சட்டங்கள் சில நேரம் நமது சிற்றறிவிற்கு சரியாக படாவிட்டாலும் கூட அவன் வகுத்துள்ள சட்டங்கள் குறைவில்லாததுதான்.
நமது அறிவின் தரம் கூடும் போது அந்த சட்டங்களில் விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரை நமது தேடலை நாம் தொடரத்தான் வேண்டும்.

ஆண் பெண்ணுக்கு மத்தியிலான உறவுமுறையை - பிரிவை தீர்மானிக்கும் எந்த சட்டமாக இருந்தாலும் அதில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கத்தான் செய்யும். இதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுள்ளோம்.

லிஆனை சிந்திக்கும் போதும் அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதை உணரலாம்.

ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை அந்தப் பெண்ணின் கணவன் நேரடியாக பார்த்து விடுகிறான். இப்போது அவனது ரத்தம் கொதிக்கும். கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்துக்கு அவன் ஆளாவான். இந்நிலையில் தண்டனைக் கொடுக்கும் சட்டத்தை அவன் கையில் கொடுத்தால் உடனடியாக அந்கு ஒரு அல்லது இரு கொலை நடக்கும். அவன் தரப்பிலும் ரோஷமுள்ளவர்கள் தரப்பிலும் இது நியாயம் தான் என்றாலும், இஸ்லாம் இத்தகைய உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு சட்டம் வகுக்காது. வகுக்கப்படும் சட்டங்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதிலும் இஸ்லாம் அக்கறைக் கொள்ளும்.

விபச்சாரம் செய்யும் மனைவியை கணவன் கொள்ளலாம் என்ற சட்டத்தை இஸ்லாம் கணவன் கரங்களில் கொடுத்திருந்தால் கணவனால் கொல்லப்படும் மனைவிகள் அனைவருமே விபச்சாரிகளாக சித்தரிக்கப்பட்டு விடுவார்கள். ஆம், பல குடும்பங்களில் கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் மத்தியில் தீராத சண்டைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம். பெண்கள் வாய் விட்டு கத்தி தீர்த்து விடுவார்கள். ஆண்களால் அப்படி முடியாது. மனைவி கணவனை வாயால் அடித்தால், கணவன் மனைவியை கையால் அடிப்பான்.

போதை - வரதட்சனை - மாமியார் மருமகள்கள் சண்டைப் பிரச்சனை போன்றவற்றால் முரட்டு கணவன்மார்களால் பெண்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் வரதட்சனைப் போன்ற காரணத்துக்காக குடும்பத்தார் சேர்ந்து தன் வீட்டுக்கு வந்த மருமகளை தீர்த்துக் கட்டுகிறார்கள்.

கணவனின் முரட்டு, மடத்தனமான சுபாவத்தை எதிர்கொள்ள முடியாத பெண்கள் தங்கள் உயிரை விடுகிறார்கள். இது பரவலான நடைமுறையாகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பெண்ணை இழந்தவர்கள் நீதித் தேடி நீதிமன்றங்கள் செல்கிறார்கள்.

கணவனுக்கென்று இருக்கும் உரிமைகளை அவன் மீறும்போது தான் அங்கு நீதி தலையிடும். அவன் உரிமைக்குட்பட்டதை அவன் செய்யும் போது அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு தொடருங்கள்.

விபச்சாரும் செய்யும் பெண்ணை கொல்லும் உரிமையை கணவன் கையில் கொடுத்தால், வரதட்சனைப் போன்ற பொருளாதாரத்திற்காக கொலைச் செய்யப்படும் மனைவி விபச்சாரத்திற்காகத்தான் கொல்லப்பட்டாள் என்று ஆகிவிடும்.

போதையால் கணவன் மனைவியை கொலை செய்தால் விபச்சாரத்திற்காக கொலை செய்தேன் என்று சொல்லி தப்பிக்க முடியும்.

இன்னப்பிற ஏதோ காரணத்துக்காக சாகடிக்கப்படும் பெண்கள் அனைவரும் கணவனின் வாக்கு மூலத்தால் விபச்சாரிகளாவார்கள். உயிரை விட்டது மட்டுமின்றி சமூகத்தில் இழிபெயரும் நிலைக்கும். நியாயம் கிடைக்க வழியில்லாமல் போகும். இன்னும் நாம் அறியாத பல நுணுக்கங்களுக்காக கூட இறைவன் கணவர்கள் கைகளில் அந்த சட்டத்தை கொடுக்காமல் தடுத்திருக்கலாம்.

பெண்களுக்கு சாதகமா..?

விபச்சாரம் செய்யும் பெண் கணவனால் நேரடியாக பிடிக்கப்பட்ட பிறகும் அவளை தண்டிக்காமலிருப்பது பெண்களுக்கு சாதகமாக - தவற வழி வகுப்பதாக ஆகாதா..? என்ற சிந்தனை எழலாம்.

ஒரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் மரண தண்டனை கொடுத்து கதையை முடிப்பதை விட தன்னை தானே சபித்துக் கொண்டு சமுதாய மத்தியில் இழி நிலையில் வாழ்வது அதை விட பெரிய தண்டனையாகும். தன் மனைவி விபச்சாரம் செய்துவிட்டால் என்று கணவன் குற்றம் சுமத்துகிறான். அதை நிரூபிக்க அவனிடம் நான்கு சாட்சிகள் இல்லை. சாட்சிகளில்லாத நிலையில் குற்றத்தை நிரூபிக்க முடியாது. உலக நீதிமன்றங்கள் என்றால் சாட்சிகள் இல்லாததால் கணவனை எச்சரித்து அவனோடு மனைவி சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கும். உண்மையில் மனைவி தவறியதை நேரடியாக கண்ட கணவன் நீதிமன்ற உத்திரவால் மீண்டும் அவளோடு சேர்ந்து வாழ முடியுமா...? அது பல்வேறு சிக்கல்களை இருவருக்கும் மத்தியில் ஏற்படுத்தி விடும். அதனால் தான் இஸ்லாம் மாற்று வழியை முன் வைத்துள்ளது.

சாட்சிகள் இல்லாத நிலையில் கணவனால் குற்றம் சுமத்தப்பட்டால் அவ்விருவரும் மக்கள் மன்றத்தில் தன்னைத் தானே சபித்துக் கொண்டு கணவன் - மனைவி உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டியதுதான். இது அவர்களிருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடியாத அளவிற்குள்ள நிரந்தர பிரிவாகும்.

இதில் யாரொருவர் பொய் சொல்லி இருந்தாலும் அவர்கள் இறைவனிடம் குற்றவாளியாகி நிற்பார்கள். இந்த விபரம் குர்ஆனில் 24வது அத்தியாயத்தின் 5 முதல் 9 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில்,

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்களும் ஊரிலுள்ள பொதுஜமாஅத்கள் முன்னிலையில் தன்னை சாபமிட்டுக் கொண்டு பிரியலாம்.

நான்கு முறை 'தாம் உண்மைச் சொல்வதாக சத்தியமும், ஐந்தாம் முறை தம் மீது தாமே சாபமிட்டுக் கொள்வது என்பதும் அத்துனை சுலபமான விஷயமல்ல. ஒரு பெரும் சக்தியை நம்பி அதற்கு கட்டுப்படும் மனநிலையைப் பெற்றவர்கள் இதில் விளையாட மாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger