Sunday, April 3, 2011

குழந்தைப் பிறந்தால்...

(குழந்தை பிறந்தவுடன்)

குழந்தை பிறந்தவுடன் அதன் சார்பாக சில செயல்களை செய்ய வேண்டும்;, பெயரிடுதல், கத்னா செய்தல், தலைமுடி இறக்குதல், அகீகா கொடுத்தல், ஆகியவை இவற்றில் அடங்கும்,. இந்த செயல்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட ஏராளமான நபி மொழிகள் வந்துள்ளன.

(குழந்தை பிறந்ததும் பெயரிடுதல்)

இரவு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு என் பாட்டனார் பெயராகிய இப்றாஹீம் என்ற பெயரை வைத்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரலி) முஸ்லிம் )

எனக்கு குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன் நபி (ஸல்) பேரித்தம் பழத்தை சிறிது அந்த குழந்தையின் வாயில் வைத்து இப்றாஹீம் என்று பெயரிட்டார்கள். அந்த குழந்தைகாக துஆ செய்து என்னிடம் கொடுத்தார்கள். (ஆபூமூஸா(ரலி) புகாரி, முஸ்லிம்)

ஒவ்வொரு ஆண்குழந்தையும் அகீகாவிற்கு பொறுப்பாவான் அவன் சார்பாக ஏழாம் நாள் (ஆடு) அறுக்கட்டும், அன்றே பெயரிடட்டும், அவன் தலைமுடியை இறக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (சமூரா(ரலி) அபுதாவூத், திர்மிதி)

குழந்தை பிறந்தவுடன் பெயர் வைப்பதற்கு தவறினால் ஏழாம் நாள் வைப்பதற்கும் முதல் ஹதீஸூம், மூன்றாவது ஹதீஸூம் சான்றாகும்.

(என்ன பெயர் வைக்காலம்...?)

குழந்தைக்கு பெயர்வைப்பது சம்பந்தமாக சிந்திப்பது அவசியமாகும். முஸ்லிம்களின் பெரும்பாலோர் தம் குழந்தைகளுக்கு பொருளற்றப் பெயர்களையும் இறைவன் வெறுக்கின்ற பெயர்களையும் வைக்கிறார்கள்.

குப்பை தம்பி, நாகூர் கனி, மஸ்தான் ராவுத்தர், ஈக்கிஅப்பா, கேத்தல் சாயுபு, ஷாஹூல் ஹமீத் போன்ற பெயர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நாகூர் பிச்சை என்றால் நாகூரில் அடங்கியிருப்பவர் பிச்சையாக வழங்கிய குழந்தை என்று பொருள்படும். நாகூரில் அடங்கியிருப்பவருக்கும் குழந்தை பிறப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

குழந்தையை கொடுப்பது இறைவனின் தனிப் பெரும் தன்மையை சார்ந்தது.

இறைவன் தான் விரும்பியவற்றை படைக்கிறான். அவன் தான் விரும்பியவருக்கு பெண்மக்களையும் தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களையும் கொடுக்கிறான். அல்லது அவர்களுக்கு ஆண்மக்களையும் பெண்மக்களையும் சேர்த்து கொடுக்கிறான் தான் விரும்பியவர்களை மலடர்களாகவும் ஆக்கிவிடுகிறான். அவன் மிக்க அறிந்தோன் பேராற்றல் உள்ளவன் (அல்குர்ஆன் 42 :49 :50)

குழந்தையை வழங்கும் தகுதி இறைவனுக்கு மட்டுமே இருந்தும் அந்த குழந்தையை பிச்சையாக கொடுக்கிறேன் என்று இறைவன் எங்குமே கூறவில்லை. மாறாக நன்மாராயமாக, அன்பளிப்பாக, வெகுமதியாக குழந்தையை கொடுக்கிறேன் என்று பல இடங்களில் கூறுகிறான் (பார்க்க அல்குர்ஆன் 16:56-59 11:71 3:39)

இறைவன் இவ்வளவு தெளிவாக சொல்லியிருக்க நாகூரார் குழந்தையை கொடுக்கிறார் என்று நம்புவதும் அதையும் பிச்சையாக கொடுக்கிறார் என்று பெயர் வைத்து நம் குழந்தைகளையே நாம் கேவலப்படுத்துவதும் நியாயமா என்பதை சிந்திக்க வேண்டும்.

இறைவனை கோபப்படுத்த கூடிய விஷயங்களில் நாகூர் பிச்சை, மொய்தின் பிச்சை, ஷாஹூல் ஹமீது போன்ற பெயர்கள் அடங்கும்.

ஷாஹூல் ஹமீது என்றால் 'அரசர்களுக்கு அரசர்' என்று பொருள். இறைவனின் பார்வையில் மனிதன் என்றுமே அடிமைதானே தவிர அரசர்களுக்கெல்லாம் அரசராக ஒருபோதும் ஆக முடியாது. அந்த தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.

கியாமத் நாளின் அல்லாஹ்வின் முன் மிகக் கெட்டவன் மலிகுல் அம்லாக் (அரசனுக்கு அரசன்) என்று பெயர் வைக்கப்பட்டவன் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)

மனிதனின் பெயர் கூட இறைவனின் தனித் தன்மையை பாதிக்கக்கூடாது என்பதற்கு இந்த ஒரு ஹதீஸே தெளிவான சான்றாகும்.

பொருள் செறிந்த அழகிய பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு)நபிமார்களின் பெயர்களை வையுங்கள் என்பது நபிமொழி. (அபூவஹ்ப்(ரலி) அபூதாவூத் நஸயி)

பெயர்களிலேயே அல்லாஹ் அதிகம் விரும்புவது அப்துல்லாஹ் அப்துர்ரஹ்மான் என்ற பெயர்களைத்தான் என நபி (ஸல்)கூறினார்கள் (இப்னு உமர்(ரலி) முஸ்லிம்)

எனக்கு குழந்தை பிறந்த அன்றே வாயில் இனிப்பை வைத்து அப்துல்லாஹ் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். (ஆபூதல்ஹா(ரலி) புகாரி, முஸ்லிம்)

உமர் ரலியின் மகளுக்கு ஆஸியா(பாவம் செய்பவள் )என்று பெயர் இருந்தது. அதை நபி(ஸல்) அவர்கள் மாற்றி ஜமீலா (அழகானவள்) என்று பெயரிட்டார்கள். (இப்னு உமர்(ரலி) திர்மிதி) சிறந்த பெயர்களை தேர்தெடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றது.

(பெயர்கள் வைப்பவரும் பெயர்வைக்கும் முறையும்)

அறியா முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கும் ஹஜ்ரத் மோகங்களில் பெயர் வைக்கும் மோகமும் ஒன்றாகும். குழந்தை உருவாக காரணமாக இருந்த தந்தையும், பல சிரமங்களை தாங்கி பெற்றெடுத்த தாயும் பெயர் வைக்கும் உரிமையை இழந்து குழந்தையை இந்த ஹஜ்ரத்கள் மடியில் படுக்க வைத்துவிட்டு பரிதாபமாக நிற்பது வேதனையாகும்.

குழந்தை பிறந்தது முதல் இறுதிவரை வளர்த்து பாதுகாக்க பொறுப்பேற்கும் தாய் தந்தை, இறுதிவரை நிலைத்திருக்கும் பெயரை மட்டும் அடுத்தவர் வாயால் வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? சிந்திக்க வேண்டாமா?

பிறந்த குழந்தையை தாயோ, தந்தையோ அல்லது இருவருமே சேர்ந்து ஒரு நல்ல பெயரால் அழைக்க துவங்க வேண்டும் என்பதைத்தான் குர்ஆன் ஹதீஸ் சொல்கிறதே தவிர கூலிக்கு ஆள் வைத்து பெயர்வைக்க சொல்லவில்லை.

இம்ரானின் மனைவிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது குழந்தை பிறந்தவுடனேயே அந்த தாய் அந்த குழந்தையை மர்யம் (இவர் ஈஸா (அலை) அவர்களின் தாய்) என்று பெயர் சூட்டுகிறார் பிறகு அந்த குழந்தையையும் குழந்தையின் சந்ததிகளையும் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாக்குமாறு இறைவனிடம் பிராத்திக்கிறார் இறைவன் இதை அழகான முறையில் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறான். இந்த விபரம் அல் குர்ஆன் 3: 36,37ல் கிடைகின்றது)

குழந்தைக்கு பெயரிட முழு உரிமைப் பெற்றவர்கள் தாய் தந்தை தான் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

பெயர் வைக்கும் போது வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்வதற்கு நிருபிக்கபட்ட நபி மொழிகள் ஒன்று கூட கிடையாது. வரக்கூடிய ஹதீஸ்கள் எல்லாம் பலவீனமானதாகவே வருகின்றன.

1 குழந்தை பிறந்ததும் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் கூற வேண்டும் என்று நபி(ஸல்)கூறினார்கள் என்ற செய்தி ஹஸன் இப்னு அலி(ரலி) மூலமாக பைஹகி, அபூயஃலா ஆகிய இரு நூல்களிள் வருகிறது.

இந்த செய்தியில் யஹ்யாஅலா என்பவரும், இப்னு சுலைமான் என்பவரும் இடம் பெறுகிறார் ஹதீஸ்கலை மேதைகள் இந்த இருவரையுமே பலவீனமானவர்கள் என இனங்காட்டிவிட்டார்கள்.

2 அலி (ரலி) அவர்களுக்கு ஹஸன் பிறந்ததும் நபி(ஸல்) அவரது காதில் பாங்கு சொன்னதை நான் பார்த்தேன் என அபூராபிவு (ரலி) அறிவிக்கிறாhகள். திர்மிதியில் இந்த செய்தி வருகிறது.

இதில் ஆஸீம்பின் உபைதுல்லாஹ்என்று ஒருவர் இடம் பெறுகிறார். இவரது ஹதீஸ்கள் முன்கர் மறுக்கப்படவேண்டியவையாகும் என புகாரி, அபூஹாத்தம் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனங்களின் காரணத்தால் இந்த ஹதீஸ்கள் ஏற்கதகும் தரத்தை இழந்து பலவீனப்பட்டு விட்டன.

எனவே பாங்கு, இகாமத் சொல்லித்தான் பெயர் வைக்க வேண்டும் என்று எவரும் கருதினால் அப்படி கருதுபவர்கள் உறுதியான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.

குழந்தை பிறந்ததும் வாயில் இனிப்பை வைத்து நல்ல பெயரைச் சொல்லி அழைத்தால் போதும் அதற்காக ஹஜரத்தை அழைப்பது, விருந்து கொடுப்பது, பாத்திஹா ஒதுவது, எந்த சடங்கும் இஸ்லாத்தில் இல்லை.

அடுத்து அகீகா கொடுப்பது தலைமுடியை இறக்குவது

ரஸூல்(ஸல்) ஹஸன்(ரலி) அவர்களுக்காக ஒரு ஆடு அகிகா கொடுத்து விட்டு தம் மகளார் பாத்திமாவிடம், பாத்திமாவே! குழந்தையின் தலைமுடியை சிறைத்து முடியின் எடை அளவிற்கு வெள்ளியை தர்மம் செய்து விடு என்றார்கள். (அலி (ரலி) திர்மிதி, ஹாக்கிம்) (முடி இறக்கி அதன் எடை அளவிற்கு வெள்ளியை தர்மம் செய்ய வேண்டும் என்ற வாசகம் இடம் பெறும் ஹதீஸ் பலவீனமானதாகும்)

அடுத்து சுன்னத் எனும் கத்னா செய்தல்.

ஆண் குழந்தைகளுக்கு கத்னா செய்வது வலியுறுத்தப்பட்ட ஒரு நபி வழியாகும்.

1) கத்னா செய்வது. 2) மர்ம உறுப்பை சுற்றி உள்ள முடியை எடுப்பது. 3)மீசையைக் கத்தரிப்பது. 4) நகத்தை வெட்டுவது. 5) அக்குள் முடியை அகற்றுவது ஆகியவை பேண வேண்டிய வழிமுறையாகும் என்பது நபிவழி - மொழி. (அபூஹூரைரா(ரலி)புகாரி, முஸ்லிம்)

ஹஸன், ஹூசைன் இருவருக்கும் பிறந்த ஏழாவது நாளே நபி(ஸல்) கத்னா செய்தார்கள். (ஜாபிர்(ரலி) பைஹகி ஹாக்கிம்)

பெண்களுக்கு கத்னா உண்டா?

ஆண்களுக்கு கத்னா செய்வது போன்றே பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸை முன் வைக்கிறார்கள்.

உம்மு அதீய்யா (ரலி) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்தார் அவரிடம் நபி(ஸல்) 'பெண்களுக்கு முழுவதுமாக கத்தரித்து விடாதே மேலோட்டமாக நறுக்கு' என்று கூறினார்கள். (இதை அதே பெண்மணி அறிவிக்கிறார், அபூதாவூத்) (பெண் குறியில் உள்ள உணர்ச்சிகளின் முடிச்சுப் பகுதியை லேசாக வெட்டுவது தான் பெண்களின் கத்னா)

இந்த செய்தியை ஆதாரமாக கொண்டு தான் எகிப்த் போன்ற நாடுகளில் பெண்களுக்கு கத்னா செய்கிறார்கள்.

இந்த ஹதீஸ் அடிப்படையில் பெண்களுக்கு கத்னா செய்வது கடமை என ஷாஃபி இமாம் கூறுகிறார்கள்.

ஆயினும் இதன் நம்பக தரத்தை ஆராய்ந்தால் ஹதீஸ் பலவீனமாக தெரிகிறது.

இதன் அறிவிப்பு தொடரில் முஹம்மத் இப்னு ஹஸ்ஸான் என்பவர் இடம் பெறுகிறார் இவர் யாரென்றே அறியப்படாதவர் என அபூதாவூத் பைஹகி இப்னு அதி ஆகியோர் கூறுகிறார்கள். எனவே இது தள்ளப்பட வேண்டிய செய்தியாகும். பெண்களுக்கு கத்னா செய்யப்பட வேண்டிய செய்தி சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களுமே பலவீனமாகவே உள்ளன. எனவே ஆண்களுக்கு மட்டுமே கத்னா சுன்னத்தாகும்.

குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டியவை பற்றி குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விரிவாக விளக்கியுள்ளோம் அதன் பிறகு ஒழுக்கமாக வளர்ப்பது அவசியமாகும். (இறைவன் அந்த சிந்தனைப் போக்கை முஸ்லிமான ஒவ்வொரு பெற்றோருக்கும் கொடுக்கட்டும்)

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger