Sunday, April 3, 2011

தமிழ் இலக்கியத்தில் பெண் பற்றிய பார்வை.

தமிழ் இலக்கியத்தில் பெண் பற்றிய பார்வை.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறான புரட்சி வெடித்துக் கொண்டிருப்பதை உலகம் கண்டு கொண்டு இருக்கின்றது. அத்தகைய புரட்சிகள் சில நேரங்களில் உலக வளர்ச்சிக்கும், பல நேரங்களில் மனித அழிவிற்கும் வித்திட்டிருக்கின்றன. ஒரு சில புரட்சிகள் ஒன்றுமில்லாமல் போவதும் உண்டு.

மனித மனநிலைகளும், வேறுபட்ட கோணங்களும், புரட்சி என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தம் கொடுத்து விட்டதால் புரட்சி ஒரு வரையறையை மீறி தன் பயணத்தைத் தொடர்கின்றது.

ஆக்கங்கள் மட்டுமே, மனித வளர்ச்சியின் மகத்துவம் மட்டுமே புரட்சியின் குறிக்கோளாக இருந்த காலங்கள் கடந்துபோய், இன்று புரட்சி என்றாலே வசை மொழிதலும், தாக்குதலும், தரக்குறைவாக விமர்சித்தலும், மற்றவர்களைப் புண்படுத்தும்படி பேசுதலும், எழுதுதலும் என்ற நிலை வந்து விட்டது.

புரட்சிக்கு புது இலக்கணம் வகுக்கப் புறப்பட்டவர்களும், அதில் சிக்கிக் கொண்டவர்களும் இன்றைய மனித எய்ட்ஸ்கள். இந்த நோய் பிடித்தவர்கள் தனது கிருமிகளைப் பேனா முனைகளாலும், பேச்சுக்களாலும் பரப்பி வருவதால் ஆங்காங்கே இந்த நோய்க்கிருமிகளை புரட்சி என்ற பொய்ப்புலம்பலாக எடுத்துக் கொண்டு தம் வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்களும், அழித்துக் கொண்டிருப்பவர்களும் அனேகம்.

இந்தப் பட்டியலில் சில காலங்களுக்கு முன் சல்மான் ருஷ்டி இடம் பிடித்தார். அவரது ரசிகராக அருண்ஷோரி சிக்கினார். இப்போது இந்த தஸ்லீமா நஸ்ரின்.

எழுத்து சுதந்திரமும், விமர்சனங்களும் அறிவாளிகளின் ஆயுதங்கள் என்பதை எவரும் மறுக்க மாட்டார். அதே சமயம் அந்த ஆயுதங்கள் எழுதுபவரின் குரல் வளையையே குறி வைக்கிறது என்றால் அதற்குப் பெயர் சுதந்திரமும் அல்ல புரட்சியுமல்ல.

ஒவ்வொரு பிரச்சனையையும் ஏன்? எதற்கு? என்ற வினாக்களோடு அணுகி விடை காண வேண்டும். மாறாக கனத்த திரைகளுக்குள் தலைகளைக் கவிழ்த்துக் கொண்டு வெளிச்சம் பற்றி விமர்சிப்பது வேதனைகளும், வேடிக்கைகளுமாகும். இந்த சிற்றறிவு கூடத்தில் சிக்கிக் கொண்ட தஸ்லிமாவுக்காக அனுதாபப் படுகிறோம்.

எங்களை பொறுத்தவரை தஸ்லிமா ஒன்றுமறியாத சிறு குழந்தை என்றாலும், அந்த குழந்தையின் குமட்டல்களுக்கும், அலறல்களுக்கும் ஆராதனை செய்து தனது அரிப்பைத் தீர்த்துக்கொள்பவர்களின் நிஜ முகங்களை அப்பலப்படுத்த வேண்டியுள்ளது.

இஸ்லாம் தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை வரவேற்க தலை நிமிர்ந்து என்றென்றும் நிற்கிறது. காயப்படுத்த வந்தவர்கள்தான் காயப்பட்டு போனார்களே தவிர இஸ்லாம் காயப்படவில்லை.

இஸ்லாம் எடுத்தோதும் சில பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க மறுக்கும் ஏடுகள் பல உண்டு.  தினமலர், இந்திய டுடே, நக்கீரன் உட்பட மேல்மட்ட பத்திரிக்கைக் கூட்டம் இதில் அடங்கும். அவ்வப்போது இஸ்லாத்தைத் தீண்டுவதும், அதன் சட்டதிட்டங்களைக் குறை கூறுவதும் இவர்களின் பொழுது போக்காகும். இப்போது ஒரு தஸ்லீமாவின் வெளிப்பாடு அவர்களுக்குள் கும்மாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஸ்லிமாவிற்கும், இஸ்லாத்திற்கும் இடையில் எத்தைகைய உறவு இருக்கின்றது, தஸ்லிமாவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்லாமிய சட்ட கருவூலகங்களின் பதில் என்ன? என்பதைப் பார்க்காமல், பார்க்கத் தெரியாவிட்டால், கேட்டு கூட தெரிந்து கொள்ளாமல் இஸ்லாத்தை இந்த பத்திரிக்கைகள் விமர்சிக்கின்றதென்றால், அவர்களின் நோக்கம் தஸ்லிமாவிற்கு உதவ வேண்டும் என்பதோ, தவறுகளைக் களைய வேண்டும் என்பதோ அல்ல. மாறாக இஸ்லாத்தைக் கேவலப்படுத்தி, முஸ்லிம்களைப் புண்படுத்த வேண்டும் என்பதேயாகும். இது மிகையல்ல. இதுதான் உண்மை.

9-7 நக்கீரன் இதழ் இதற்கான போதிய சான்றாகும். தஸ்லிமா நஸ்ரின் : பயங்கரவாதிகள் விதித்த மரண தண்டனை ! என்று அட்டைப்படத்தில் கொட்டை எழுத்துக்களில் போட்டு, அந்த மரண தண்டனை நியாயமானதா? என்று ஒரு அலசல் நடத்தி இருக்கிறது நக்கீரன் ஏடு.

தஸ்லிமா என்ற பெண்ணின் உரிமை பறிக்கப்பட்டால் அதற்காக மத பாகுபாடின்றி நக்கீரன் போன்ற இதழ்கள் குரல் கொடுத்தால், கண்டனங்கள் தெரிவித்தால் அந்த இதழ்களோடு நாமும் கைகோர்த்து நிற்போம். அந்த வகையில் நக்கீரனின் விமர்சனத்தை நாம் வரவேற்கிறோம். அதே சமயம் அந்த ஏட்டில் இடம்பெற்றுள்ள அலசல், சத்திய இஸ்லாத்தின் மீது அவதூறு கூறி, இஸ்லாம் ஆண் ஆதிக்கத்திற்கு துணை போகிறது, பெண்களை அடிமைப்படுத்துகிறது என்றெல்லாம் வசை பொழிந்துள்ளதால் அது சம்மந்தமாக, நக்கீரன் போன்ற குறைபார்வையுடைய விமர்சன ஏடுகளின் புத்தியில் உறைப்பதுபோல், இஸ்லாத்தின் எதார்த்த நிலைகளைக் கூறுவது நம்மீது அவசியமாகின்றது.

இஸ்லாத்தில் ஆணாதிக்கம் வெறும் குற்றச்சாட்டே..!

தஸ்லிமாவின் கடந்த கால வாழ்க்கையை நக்கீரன் அலசும்போது ‘ஆணாதிக்கத்திற்கு இஸ்லாம் தந்துள்ள சலுகையில் மூன்று முறை விவாகரத்து செய்யப்பட்டவர், அந்த கோபம் ஆணதிகாரத்து மீது வீறு கொண்டு கிளம்பிது. பெண் உரிமை, பெண் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஆதரவாகவும், சாடிஸ்களுக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது! என்று தனது குற்றச்சாட்டை நக்கீரன் நம் முன்னே வைக்கிறது.

இதில் பிரதானமாக மூன்று குற்றச்சாட்டுகள் இஸ்லாத்தின் மீது வீசப்பட்டுள்ளதால், அந்த குற்றச் சாட்டுகள் எந்த அளவிற்கு இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு மாற்றமானவை என்பதை விரிவாக உணர்த்துவது அவசியமாகும்.

குற்றச்சாட்டுகள்:

1. ஆணாதிக்கம்
2. பெண் உரிமையைப் பறித்தல்
3. பெண் முன்னேற்றத்திற்குத் தடையாக இருத்தல்
இஸ்லாம் ஆணாதிக்கத்தை விரும்புகிறதா..?

ஆதிக்கம் என்ற சொல், மற்றவர்களை அடிமைப்படுத்துவது குறித்து பயன்படுத்தப்படுவதாகும். இந்த சொல் முஸ்லிம் ஆண்களோடு சம்மந்தப்படுத்தப்பட்டதிலிருந்து, முஸ்லிம் ஆண்கள், பெண்களை அடிமைப் படுத்துகிறார்கள் அதை இஸ்லாம் விரும்புகிறது என்ற தோற்றம் இவர்களின் குற்றச்சாட்டுகளில் காணப்படுகிறது.

இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் எந்த அளவுகோல் கொண்டு பார்க்கின்றன, எந்த விஷயங்களில் ஆண் பெண்ணுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி, எந்தெந்த விஷயங்களில் வேற்றுமை கற்பிக்கின்றது அது எந்த வகையிலெல்லாம் நியாயம் என்பதைப் பார்ப்பதற்கு முன், இஸ்லாம் அல்லாத மற்ற சமயங்கள் பெண்களை எந்த கோணத்தில் பார்க்கின்றன. மதமில்லாத சட்ட திட்டங்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையெல்லாம் எடுத்துக் காட்டுவோம்.

பெண்ணுரிமைக்காக வக்காலத்து வாங்குவதாக கூறுவோறும், அவர்கள் சார்ந்து நிற்கும் சமயங்களும் உண்மையிலேயே பெண்களை காலா காலமாக பாதாள படுகுழியில் தள்ளியே வைத்துள்ளன.

இஸ்லாம் தமது சமய நெறியை இறுதி கட்டமாக வெளிப்படுத்துவதற்கு முன் ஒவ்வொரு சமயத்திலும் முனிவர்கள் இருந்தார்கள். ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் தம், தம் சமய கோட்பாட்டிற்காக வேத ஏடுகளைத் தொகுத்தார்கள். அப்படிப்பட்ட தொகுப்பு ஒவ்வொன்றிலும் பெண்மை கேவலப் படுத்தப்பட்டு அவளது மெண்மை பறிக்கப்பட்டு, உரிமைகளும், முன்னேற்றங்களும் பாழ்படுத்தப்பட்டு, அவளை மனித இனமாகவே மதிக்காத நிலை நீடித்தது. இன்றும் நிடிக்கின்றது.

வேதகாலம், வேதகாலத்திற்கு முந்திய காலம், அதை அடுத்து வந்த காலங்கள், பழைய தமிழ் இலக்கியங்கள் அதன் பழமொழிகள், பழங்கதைகள், தொல்காப்பியம், அதை அடுத்து வந்த சங்ககால இலக்கியங்கள், திருக்குறள் காலம், அறநூல்கள் என்று பெயர் பெற்றவை. சிலப்பதிகாரம், மணிமேகலை, ராமாயணம், மனுதர்மம் இப்படி எல்லா வகை சமய மற்றும் இலக்கிய நூல்களிலும் பெண்மை வதைக்கப் பட்டு, வெறும் போதைப் பொருளாக ஆக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, பறிக்கப்பட்டு சிதைத்து சின்னாபின்னப் படுத்தப்பட்டிருப்பதை காணலாம்.

மேலதிகமாக விளக்கம் கூற தேவையில்லாத அளவிற்கு சமய சந்தைகளின் இலக்கிய கடைவிரிப்புகள் இலவசமாக பெண்களை இம்சித்துள்ளன.

இந்நாட்டு சமய இலக்கியங்கள் அனைத்துமே பெண்களின் கண்ணீர் காவியங்கள். கணவன் என்னதான் கொடுமை செய்தாலும் அதை பொறுமையுடன் சகிப்பதுதான் இறைபக்திக்கு நெருக்கம் என்று போதித்துள்ளன.

பஞ்சபாண்டவர்கள் தம் தாயின் உபதேசத்தை தவறாக புரிந்து, அதாவது… கொண்டுவந்த பிச்சையை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதை, உங்களோடு இருக்கும் பெண்ணை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பொருள் எடுத்து, ஒரு பெண்ணை ஐவர் மணந்து அவளுக்கு !பத்தினி! பட்டமளித்த விளக்கங்கள் அனேகம்.

ஓநாய்களின் அன்பு எப்படி உண்மையில்லாததோ அதே போன்று பெண்களின் அன்பும் உண்மையில்லாதது. உலகத்து மாந்தர் பெண்களை பெண்களை நம்ப வேண்டாம். (தேவி பாகவதம்)

ஆற்றையும் காற்றையும் நம்பலாம். கோபமத யானையை நம்பலாம். சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திண்டாடுவீரே…….. (இந்து சமய சான்றோர்)

தொல்காப்பியம் காலத்தில் ஒருவன் எத்துனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று பெண்களைப் போகப் பொருளாக வருணிக்கின்றது. தொல்காப்பியத்தின் கற்பு இயல் பிரிவில் (பக்கம் 46) பரத்தையர் பிரிவினை என்று பெண்கள் ஆண்களின் வடிகால்களாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காதற்பரத்தை, கற்பரத்தை, சேரிபரத்தை, காமகிழத்தி என்று பிரித்து ஆண்கள் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் செல்வதை அனுமதிக்கிறது.

சங்க காலத்திலும் இதே நிலைதான் பெண்கள் தங்கள் வாழ்வின் அடிப்படை தேவையான துணை ஆடவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்து நின்றார்கள். அரசகுல பெண்களுக்கும் இதே நிலைதான் என்று புறநானூறு கூறுகிறது.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் (901)
மனையாளை அஞ்சும் மறுமையலாளன் (904)
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவில் செய்வார் கண் இல் (909)

கணவன் எந்த ஒரு தவறைச் செய்தாலும் பொறுமையுடன் சகிக்க வேண்டும். அவனுக்கு எதிராக சிந்திக்கவோ, செயல்படவோ கூடாது என்கிறது நறுந்தொகை. ! பெண்டிற்கழகு எதிர் பேசாதிருத்தல்!

சிலப்பதிகாரம்

(திருமணத்தை ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்றும், கணவன் மணைவியின் வாழ்க்கை இனிமையாக வாழலாம் இல்லையெனில் பிரிந்துவிடலாம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஒப்பந்தத்திற்குரிய தகுதியே இதுதான். பின்னர் நாம் இதை விளக்குவோம்)

பெண் என்பவள் கணவனுக்காகவே வாழ வேண்டும், தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அவனது நடவடிக்கைகளை, ஒழுங்கீனங்களை எதிர்த்து அறிவுரை கூட கூறக்கூடாது. தாங்கிக் கொண்டு வாழவேண்டும் என்பதையே போதிக்கின்றது.

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட தொழுநன் உருகுறை தாங்குறுவும்
பெண்டிரும் உண்டுகொல். (ஊர் சூழ்வரி – 51)

அதே சிலப்பதிகார காலத்தில் தாயே தன் மகளை விலைபேசி ஆடவரோடு சேர்த்துவிடும் சண்டாளத் தனமும் நடந்துதான் உள்ளன. ! மாலை வாங்குனர் சாலும் நம் கொடிக்கு ! என்கிறது மாதவி தாயின் குரல்.

சங்க கால இலக்கியங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்படாததற்கான காரணமே அதற்கு முந்தைய வேத காலங்கள்தான்.

வேதங்களைப் பலவாறாகப் பிரித்து அதில் மனிதன் வர்ணாசிரமத்திலும், பிறப்பிலும் ஏற்றத் தாழ்வுகளை கற்;பித்து, சட்டங்கள் வகுத்து, அந்த வேதக் கட்டளைகளை கண்மூடி ஏற்று இன்றுவரை பெண்களை கொடுமைப் படுத்தும் நிலையையும் பார்க்கிறோம்.

சூத்திர இனத்துப் பெண்கள் உயர்ந்த குலத்தவர்களை மணம் செய்து கொள்வது பாவம் என்கிறார் கொளதமர். பெண்கள் சமய சடங்குகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறது மனு தர்மம்.

கணவனுக்கு வழிபட்டுநடக்காத பெண்களை, நெறி தவறும் பெண்களை வைக்கோற்கட்டில் வைத்து உயிரோடு கொளுத்த வேண்டும். (போதா நயர் தரும சூத்திரம்)

பிரமத்தின் வாயிலிருந்து பிறந்தவன் பிராமணன்;., தோளிலிருந்து பிரந்தவன் சத்திரியன்., தொடைகளிலிருந்து பிறந்தவன் வைசியன்., பாதங்களிலிருந்து தோன்றியவன் சூத்திரன்.  (ரிக் வேதம்)

இந்த வேத அடிப்படையில் தொகுக்கப்பட்ட சட்டங்கள் மிகக் கொடுமையானவை.

இன்றைக்கும் தமிழ் அறிஞர்களால் சிறப்பாகப் பேசப்படும் சங்க காலத்தில் பெண்கள் கொத்தடிமைகள் போல் பாவிக்கப்பட்டுள்ளார்கள். சொத்துரிமை, கல்வி, மறுமணம் எல்லாம் மறுக்கப்பட்டன.

கணவனை இழந்தவளை கைம்பெண், ஆளில்லா பெண்டிர், கழிகல மகளிர் என்றெல்லாம் தூற்றப்பட்டது. கணவனை இழந்த பெண் அவனுக்கு பிறகு வாழ்வது புனிதமல்ல, அவனோடு உடன்கட்டை ஏற வேண்டும் என்றெல்லாம் சங்க கால ஏடுகள் சக்கை போடு போடுகின்றன.

உடன்கட்டை ஏற மறுக்கும் பெண்கள் தம் உணர்ச்சிகளை சாகடிப்பதற்காக கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும. அவளது அழகு சிதைக்கப்பட வேண்டும், அவர்களின் கூந்தல் வெட்டப்பட வேண்டும், வளையல்கள் நொறுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் சட்டம் இயற்றினர்.

மண்ணூறு மழித்தலைத் தெண்ணீர் வார
கழிகல மகளிர் போல
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லியுணவின் மனைவியொடு (புற – 4:250)

கணவனை இழந்தவளின் (அவள் எவ்வளவுதான் இள வயதுடையவளானாலும் சரி) முடிகளைக் களைந்தெறிந்து, முகம் கை கால்களில் ஆபரணங்கள் அணிய விடாமல் தடுத்து, சுவைமிக்க உணவுளை அவர்களின் கண்களில் கூட காட்டாமல், அரிசி கீரையே அவர்களின் உணவு. கணவனை இழந்ததற்காக தரையில் படுத்து, கண்ணீராலேயே தரையை மொழுக வேண்டும். (ஐந்குறு நூறு)

அண்டை நாடுகள் மீது படையெடுத்து பிடிபட்ட பெண்களின் சடைகளை அறுத்து திரித்து கயிராக்கி பெண்களை உழவு மாடுகளாக பூட்டி சித்திரவதை செய்யப்பட்டதையும் இலக்கியங்கள் கூறுகின்றன. (பதிற்று பத்து)

ஆண்கள் நடத்தும் காமலீலைகளை, விபச்சார வெறித்தனங்களைப்பற்றி வாய் திறக்காமல் பெண்களுக்கு மட்டும் கற்பு நெறி போதிக்கிறது தொல்காப்பியம். (களவியல்)

திருவள்ளுவரின் குறள்களிலும் பெண்ணடிமை கருத்துக்கள் அனேகம். பெண்களுக்கான கற்புநெறியைப் பற்றி பல இடங்களில் கூறுகிறாரே தவிர, ஆண்களுக்கு அறிவுரை அதிகம் இல்லை. இருக்கும் இடத்திலும் ! பிறன் மனை நோக்காத பேராண்மை ! என்கிறார். ஆண்கள் பிறரின் மனைவி மீது மோகம் கொள்ளாமை பேராண்மை என்கிறாரே தவிர, பிற பெண்கள் மீது மோகம் கொள்ளாதே என்று கூறவில்லை.

கணவனுக்குக் கீழ்படிய வேண்டும் மணைவி, மணைவியின் ஆலோசனைப்படி நடப்பவன் மறுமையில் வெற்றிபெற மாட்டான், கணவனின் சொற்களுக்குக் கட்டுப்படுவதே மணைவியின் கடமை. மாறாக ஆடவன் பெண்களின் ஏவலுக்கு அடிபணிதல் கூடாது.

பிராமணர்கள் சூத்திர பெண்களை கண்களால் காண்பதே பாவம். சூத்திரப் பெண்ணொருத்தி பிராமணனைப் பார்த்துவிட்டால் பிராமணன் தீட்டு அடைந்து விடுகிறான். அன்றைய தினம் அவன் மறை ஓதக்கூடாது. (தரும சூத்திரம்)

பெண்கள் தனி வாழ்க்கை வாழக் கூடாது. அவள் குழந்தை பருவத்தில் தந்தையை, இளமைப் பருவத்தில் கணவனை, முதுமையில் ஆண்மக்களைச் சார்ந்தே வாழ வேண்டும் என்பது மனுவின் கோட்பாடு. (மனுதர்மம்)

ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிவைத்து பெண்களுக்காக இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை பல பாகங்கள் அளவிற்கு எழுதலாம். தாசி, வேசி, தேவடியாள் போன்ற சொற்கள் எப்படி வந்தன? அதன் பின்னனி என்ன? வேதங்களும், அன்றைய முனிவர்கள் பெரிய மனிதர்கள் இதையெல்லாம் எப்படி ஏற்றிப் போற்றினார்கள். உடன் கட்டை கொடுமைகள், உண்ணா நோன்பு கொடுமைகள், சொத்துரிமை பரிப்பு கொடுமைகள் என்று ஒரு மிகப் பெரிய பட்டியலையே நம்மால் கொடுக்க முடியும். அதன்பிறகு இஸ்லாமிய அடிப்படை வாதம் பழைமையானது, முறையற்றது என்றெல்லாம் புலம்பித் தெரியும் மதவாதிகள் தங்கள் தலைகளில் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டியதுதான். தஸ்லிமா பிரச்சனையில் நிறைய விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளதால் இதோடு இதை முடிக்கிறோம்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger